வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு, அதன் பயணிகள் பெட்டியொன்று தண்டவாளத்திற்கு அருகில் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 12 பயணிகளில், பெரும்பாலானோர் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். எனினும், கடுமையான காயங்களுக்கு உள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக பிரதான ரயில் பாதையின் போக்குவரத்து தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை வழமைக்குக் கொண்டு வர ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
