Our Feeds


Tuesday, May 19, 2026

SHAHNI RAMEES

உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்கு விசேட வாய்ப்பு!

 


இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கால யுத்தத்தை

முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட உயிர்நீத்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம், செவ்வாய்க்கிழமை (19) பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.இலங்கை செய்திகள்


இம்முறை நிகழ்வுகளில் ஒரு விசேட மாற்றமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளுடன் இணைந்து பணியாற்றி உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்கு விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


சுமார் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமது உயிரைத் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் கௌரவத்தைச் செலுத்தும் முகமாக ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய மாவீரர்கள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் இம்முறை 15 ஆவது முறையாக இந்நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இம்முறை நிகழ்வில் சில விசேட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்வில் அதிக வாய்ப்புகளை வழங்குவதே பிரதான நோக்கமாகும். எனவே, முன்னைய ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.


மற்றொரு முக்கிய விடயமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து முப்படைகளுடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கு இம்முறை விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்ட இத்தகைய குடும்பங்கள் விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து தமது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் கௌரவம் அளிக்கவும் விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மாலை 3 மணிக்கு இந்த நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதுடன், விசேட அதிதிகள் மாலை 3:15 மணிக்குள் வருகை தரவுள்ளனர். தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என மொத்தம் 2,769 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.


மாவீரர்களின் பெற்றோரைப் பொறுத்தவரை, இம்முறை சுமார் 160 பேருக்குப் பிரதான நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிகழ்வின் போது ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் விசேட அதிதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போது, அந்தந்தப் படைகளைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் அவர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முழு நிகழ்வும் நாளை மாலை 6:45 மணியளவில் நிறைவடையும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »