Our Feeds


Friday, May 22, 2026

Zameera

மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை நாங்கள் மேம்படுத்துவோம்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மலையக மக்களை நாடுக்கடத்தும்  பாவகார செயலுக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் இன்றும் உள்ளார்கள். பிரதான தமிழ் அரசியல் கட்சியின் தலைவரும் ஆதரவளித்துள்ளார்.ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளன. 1948 ஆம் ஆண்டு இழைத்த பாவத்துக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது.மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை நாங்கள் மேம்படுத்துவோம். அந்த பொறுப்பு எமக்கு உண்டு என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.அரசியல் பகுப்பாய்வு


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற மலையக காணி உரிமை தொடர்பான அவசர சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


 தேசிய மக்கள் சக்தியின்  வெற்றியின் பிரதான பங்காளிகளாகவே மலையக மக்கள் உள்ளார்கள். ஆகவே அவர்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் மனசாட்சியுடன் செயற்படுவோம்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாத்திரம் தோட்டத் தொழில்களுக்காக மக்கள் அழைத்துவரப்படவில்லை. மலேசியா, மொரிசியஸ் உட்பட பல நாடுகளுக்கும் அவர்கள் சென்றுள்ளார்கள். ஆனால்  அங்கு சென்றவர்களின்  வாழ்க்கைத் தரம் குறுகிய காலத்தில் முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால் இலங்கைக்கு வந்தவர்களின் வாழ்க்கை 200 ஆண்டுகாலமாக பின்னடைவில் உள்ளது.


மலையக மக்களை நாடுக்கடத்தும்  பாவகார செயலுக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் இன்றும் உள்ளார்கள். பிரதான தமிழ் அரசியல் கட்சியின் தலைவரும் ஆதரவளித்துள்ளார்.ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளன. 1948 ஆம் ஆண்டு இழைத்த பாவத்துக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது.



இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது,ஆனால் அதன் பயன் மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை. பொருளாதரம், சமூகம் மற்றும் வாழ்வியல் கட்டமைப்பில் மலையக மக்கள் வேண்டுமென்றே பின்தள்ளப்பட்டார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே மலையக மக்கள் குறித்து நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.


வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் தான் எமது ஜனாதிபதி. மலையகத்துக்கு சென்ற போது  உழைப்பால் தோய்ந்த ஒரு தாயின் கரங்களை அவர் பற்றி பிடித்தார். இது ஒன்றும் அரசியல் காட்சியல்ல, மலையக இளைஞர், யுவதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்,கல்வித் துறையை மேம்படுத்தவும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.


மலையகத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை நாங்கள் ஆதரவளிக்கவில்லை. வன்முறையில் ஈடுபட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த தோட்டம் யாருக்கு சொந்தமானது என்பது அனைவருக்கும் தெரியும்.பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை நாங்கள் முன்னேற்றுவோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »