Our Feeds


Tuesday, May 12, 2026

Zameera

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள் விரோத ஆட்சியே இன்று காணப்படுகின்றது - சஜித்




 மக்களுக்கு விரோதமான, மக்களின் துன்பத்தை புரிந்து கொள்ளாத, மக்களை பழிவாங்கும் அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுகின்றது. மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள் விரோத ஆட்சியே இன்று காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போது மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும், ரூ. 9,000 கட்டணத்தை ரூ. 6,000 ஆகவும், ரூ. 3,000 கட்டணத்தை ரூ. 2,000 ஆகவும் குறைப்போம் என்றும் வீர வசனம் பேசிவிட்டு, தற்சமயம் பல கட்டங்களில் இந்த மின்சாரக் கட்டணங்களை அதிகரித்துள்ளனர்.


இதனால் உயர் மத்தியதர வர்க்கம், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் என சமூகத்தில் பல தரப்பினரும் ஆபத்துக்கு ஆளாகி காணப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


SMART சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் இன்று (12) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.



இந்த அரசாங்கம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரையும் மறந்துவிட்டது.


மின்சாரக் கட்டண அதிகரிப்புகளால் உயர் மத்தியதர வர்க்கம், கைத்தொழிற்றுறையினர், தொழில்முனைவோர், மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் உற்பத்திச் செலவுகள் வேகமாக அதிகரித்து காணப்படுகின்றன.


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன் குறித்த நாட்டில் காணப்படும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றனர்.


இவ்வாறு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதனால் இலங்கையை தமது முதலீட்டு தளமாக கருதி இதுவரை செயற்பட்டு வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் மனமுடைந்து போகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


முதலீடுகளைப் பாதுகாப்போம் என்று வாக்குகளைப் பெற்ற இந்த அரசாங்கம் இன்று முதலீடுகளுக்கு மூடு விழா நடத்தி வருகின்றது.


முதலீட்டாளர்களைப் பாதுகாத்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்று தேர்தல் மேடைகளில் கோஷமிட்ட அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தலைமையிலான ஜேவிபி அரசாங்கம் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் இன்று மீறிவிட்டது.


சமூக வலைதளங்கள் வழியாக பொய்களை பரப்புவதை மாத்திரமே இந்த அரசாங்கத்தால் நன்றாக செய்ய முடியுமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. அண்மைய அரசியல் வரலாற்றில் தோன்றிய மிகவும் அதிகமான பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


தற்போதைய ஆட்சியாளர்கள் தெளிவான பொய்களையே கூறுகின்றனர்.


தேர்தல் மேடை தோறும் 33% ஆல் மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று கூறியதை கேட்டும் நம்பியும் மக்கள் பெரும் நம்பிக்கையோடு இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். அன்று உருவான அந்த மகிழ்ச்சிப் பூரிப்பு தற்போதைய அரசாங்கத்தின் அலட்சியத்தால் இறுதியில் துயரமாகவே மாறியுள்ளது.



இன்று மக்கள் தினசரி மூன்று வேளை உணவு உண்பது, பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பது குறித்தும் பல சிக்கலான நிலைமைகள் எழுந்து காணப்படுகின்றன.


இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் கிட்டிய காலத்தில் நீர் கட்டணங்களையைம் அதிகரிப்பதற்கு பிரயத்தனப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மின்சாரக் கட்டண அதிகரிப்பைப் போலவே, நீர்க் கட்டணமும் அதிகரிக்கும்.


மின்சாரக் கட்டணத்தை அதிகரித்ததைப் போலவே நீர்க் கட்டணத்தையும் அதிகரித்து மக்களை மேலும் அல்லல்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பது மக்களின் நலனுக்காக செயற்படும், மக்களை வாழவைக்கும் மனிதாபிமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரச ஆட்சியாகவே அமைந்து காணப்படும்.


மக்களின் வாழ்வை சீரழித்து, மக்களின் நம்பிக்கைகளை வீணடித்து, எதிர்பார்ப்புகளை கானல் நீராக்கி முன்னெடுக்கும் ஆட்சியே நாட்டில் தற்சமயம் காணப்படுகின்றன.


இந்த அரசாங்கத்தின் பொய் ஏமாற்றுகளை இப்போதாவது புரிந்துகொள்ளுமாறு, உண்மையை சரியாக புரிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »