சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு சமூக மற்றும் கலாசார ரீதியிலான மனோபாவங்கள் பெரும் தடையாக இருக்கின்றன. அதனால் முறைப்பாடுகள் குறைந்த மட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரீதி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தேரர் மற்றும் நாவற்குழி விகாரையின் தேரர் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை அடுத்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுராதபுரம் சம்பவத்தில் சந்தேகநபரை கைது செய்வதில் நிலவிய இழுபறிகள் குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். சுதந்திரப் பெண்கள் இயக்கம் போன்ற அமைப்புகள், இத்தகைய பாரதூரமான சம்பவங்களை கையாள்வதில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லையென குற்றம் சுமத்தியுள்ளதோடு, சட்டத்தை அமுல்படுத்துவதில் நிலவும் தாமதங்கள் குறித்தும் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இவ்வாறான நிலையில் மதகுருமார்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் இழைக்கப்படும் துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வருவது மிகக் குறைவாகவே உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றுவதற்கும், முறையான சட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் விழிப்புணர்வுத் திட்டங்கள் அவசியமாக உள்ளன என்றார்.
