(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களையும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுக்கொடுத்த தலைவர்களையும், தற்போதைய சமூகம் மறந்து செயற்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமான விடயமாகும் என பெல்லன்வில தம்மாரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களும், அதற்கான உறுதியான தலைமைத்துவத்தை வழங்கிய தலைவர்களும் தங்களது பிரதான கடமைகளை செவ்வனே நிறைவேற்றினர். ஆனால், அந்த வெற்றியைத் தொடர்ந்து பயணிக்க வேண்டிய பாதையில் நாம் ஒருவிதத்தில் வழிதவறிவிட்டோம் என்றே நான் கருதுகின்றேன். தேசிய ரீதியாக எமக்குத் தேவையான ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். குறிப்பாக, அரசியல் ரீதியாகப் பார்த்தால், நாம் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டே இருந்தோமே தவிர, அதனை நிறுத்தவில்லை.
இந்த அரசியல் சமநிலையின்மையால், யுத்தத்தில் தோல்வியடைந்த பயங்கரவாத சக்திகள், வேறு வழிகளில் எமது நாட்டில், குறிப்பாக வடக்கில் தமக்கான ஒரு பலத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. அதேபோல், உலகமயமாக்கல் சூழலில், இலங்கை என்ற தேசத்தைப் பிரித்துத் தனித் தனி நாடுகளாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படும் பெரும் எண்ணிக்கையானவர்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ளனர்.
அதுமட்டுமன்றி, எமது நாட்டைத் துண்டாட வேண்டும் எனக் கருதும் பெரும் பிரிவினர் இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் உள்ளனர். நான் இனவாதத்தையோ அல்லது பிரிவினையையோ தூண்டுவதற்காக இதனைக் கூறவில்லை; இதுவே தற்போதைய கள யதார்த்தமாகும். சமீபத்தில் கூட, இலங்கை துண்டாடப்பட வேண்டும் எனக் கருதும் தலைவரொருவர் அங்கு அதிகாரத்துக்கு வந்துள்ளார்.
இந்த நிலையை உணர்ந்து, இப்பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கு எமது நாட்டின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் போதுமான அக்கறையுடன் செயற்படவில்லை. யுத்தத்தில் தோல்வியடைந்த அந்தப் பயங்கரவாதக் கும்பல், தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. இலங்கையில் தமது திட்டங்களை முன்னெடுக்க முடியாதவர்கள், லண்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு, இன்றும் நாட்டைப் பிரிக்கும் தங்களது சதித்திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். எனவே, யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாம் கூறினாலும், எமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. வடக்கையும் கிழக்கையும் பிரித்துத் தனிநாடாக்கி, அதனை மேற்கத்தேய சக்திகளின் கீழ் கொண்டுவருவதே அந்தப் பன்னாட்டு சக்திகளின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது.
இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து, நாட்டை முழுமையாக விடுவித்த காரணத்தினாலேயே, அந்தப் பன்னாட்டு சக்திகள், எமது இராணுவ வீரர்களையும், அவர்களுக்குத் தலைமை தாங்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களையும் தமது பரம எதிரிகளாகவே கருதி செயற்படுகின்றன. இந்தச் சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக, இலங்கை ஒருபோதும் வலுவான நாடாக மாறிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுகின்றனர். நாட்டின் விவகாரங்களில் மிகவும் நுணுக்கமாகத் தலையிட்டு, நாட்டைப் பலவீனப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து நாடு எவ்வாறு மீண்டு வரும் என்பதை நான் கூற முனையவில்லை. இருப்பினும், மிகவும் கஷ்டப்பட்டுப் பெற்ற இந்த வெற்றியைப் பாதுகாத்துக்கொள்வதும், குறைந்தபட்சம் எமக்குள்ளாவது ஒற்றுமையைப் பேணுவதும், அனைத்துக்கும் மேலாக இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவ வீரர்கள் மீது கௌரவத்தையும் நன்றியுணர்வையும் செலுத்தி செயற்படுவதுமே எமது தற்போதைய கட்டாயத் தேவையாகும். இல்லையெனில், நாம் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம்.
தம்மிடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பதில் மாத்திரமே இன்று அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும் கூடப் பந்தயத்தில் வைக்கத் துணியும் துர்பாக்கியசாலிகள் எம்மிடையே உள்ளனர்.
இந்த அவல நிலைக்கும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டும். நாம் மிகவும் விரைவாக எதனையும் மறந்துவிடும் ஒரு சமூகமாக மாறிவிட்டோம். இராணுவ வீரர்களுக்குப் பெரும் கௌரவத்தை அளித்து, அவர்களை தெய்வங்களுக்கு ஒப்பானவர்களாகக் கருதிய மக்கள், இன்று அவர்களை முற்றிலும் மறந்துவிட்டனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்றார்.
