அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும்
ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியைத் சமாளிக்க, திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீட்டை வழங்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை போக்குவரத்து அமைச்சு ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி தம்மிக ரத்ன கருத்து வெளியிடுகையில்,
கடந்த ஆண்டு ஊழியர்களின் வேதனச் செலவினங்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் மாதம் தோறும் சுமார் 274 மில்லியன் ரூபாய் வீதம், ஆறு மாத காலத்திற்கு நிதி உதவி வழங்கியிருந்தது.
எனினும், அந்த உதவித் திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளதால், சபையினால் அதிகரிக்கப்பட்ட நடப்புச் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் போயுள்ளது.
உலக சந்தையில் டீசல் விலை அதிகரித்தமை சபையின் ஒட்டுமொத்த இயக்கச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளது.
அண்மையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வேதன உயர்வு காரணமாக, சபைக்கு மேலதிக நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு காரணிகளாலேயே திறைசேரியின் உதவி கோரப்பட்டுள்ளது.
திறைசேரியின் நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், தினசரி பேருந்து போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்பட மாட்டாது என உறுதியளித்த தம்மிக ரத்ன, ஆனால் ஊழியர்களுக்கான வேதனத்தை வழங்குவதில் சபை பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.
"நிதி உரிய நேரத்தில் கிடைக்காவிடின் ஊழியர்களின் வேதனத்தை வழங்க முடியாது போகும். அவ்வாறானதொரு சூழ்நிலையில், அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன," என அவர் சுட்டிக்காட்டினார்.
செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், இலங்கை போக்குவரத்துச் சபை இதுவரை பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான அனுமதியைக் கோரவில்லை.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழேயே பேருந்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சபையினால் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்த முடியாது.
தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நிரூபித்து, பணிப்பாளர் சபையின் உத்தியோகபூர்வ ஒப்புதலைப் பெற்ற பின்னரே கட்டண திருத்தக் கோரிக்கையை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க சபை சில உள்வாரி எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நிர்வாக மற்றும் அலுவலக ஊழியர்களின் அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்குமாறும், அவர்களுக்கான எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில், பொதுமக்கள் பயன்படுத்தும் பயணிகள் பேருந்துகளுக்கு எந்தவொரு எரிபொருள் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
பொதுப் போக்குவரத்து ஒரு அத்தியாவசிய சேவை என்பதால் பேருந்துகள் தடையின்றி இயங்கும்.
டீசல் விலை உயர்வு அல்லது தற்போதைய நிதி நெருக்கடி காரணமாகப் பேருந்துகளின் இயந்திரப் பராமரிப்புப் பணிகளோ அல்லது பயணிகளின் பாதுகாப்பு விவகாரங்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமரசம் செய்யப்பட மாட்டாது எனத் தம்மிக ரத்ன பொதுமக்களுக்கு மேலும் உறுதியளித்துள்ளார்.
