Our Feeds


Monday, May 11, 2026

Zameera

கபில சந்திரசேனவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, அது ஒரு தற்கொலைக்கான தூண்டுதல் - சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் என்பது வெறும் தற்கொலை அல்ல, அது ஒரு தற்கொலைக்கான தூண்டுதல் என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக தற்போது பல்வேறு மர்மமான தகவல்கள் கிடைத்து வருவதாகவும், குறிப்பாக அவருக்குப் பிணை வழங்குதல் மற்றும் அந்தப் பிணையை எதிர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தமது கட்சித் தரப்புத் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். 

மிக விரைவில் இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைத் தாம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகக் கூறிய அவர், இது திட்டமிட்ட முறையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒரு சம்பவம் என்பதை வலியுறுத்தினார்.

மறைந்த கபில சந்திரசேனவை மரண அச்சுறுத்தல் விடுத்து, அவரிடமிருந்து பலாத்காரமான முறையில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், அந்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகச் சேர்க்குமாறு அவர் வற்புறுத்தப்பட்டதாகத் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான பலாத்கார அச்சுறுத்தல்கள் குறித்து கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோதே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பலாத்காரமான முறையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டுக்காக உழைத்த தலைவர்களைச் சட்டவிரோதமாகச் சிக்க வைக்க அரசாங்கம் முயலுமானால், அதற்கு எதிராக நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நோக்கிக் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், ஜனாதிபதி ஜனநாயக ரீதியில் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர் என்பதை நினைவூட்டியதுடன், அவர் அடக்குமுறையை ஏவி ஆட்சியை முன்னெடுக்க முற்பட்டால், அந்த அடக்குமுறையைத் தமது தரப்பு முடிவுக்குக் கொண்டுவரும். 

இதேவேளை, மின்சாரக் கட்டணம் மீண்டும் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் விசனம் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகப் போலி வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தொடர்ச்சியாகக் கட்டணத்தை உயர்த்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்களினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது இந்தச் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடான இந்தியாவின் தமிழக முதலமைச்சர் (விஜய்) பதவியேற்றவுடன் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், இந்தியாவிற்கு ஒரு 'தளபதி' கிடைத்திருந்தாலும் இலங்கைக்கு ஒரு 'பச்சபதி' (பொய்யர்) மாத்திரமே கிடைத்துள்ளதாகச் சாடினார். 

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நிலக்கரி மற்றும் ஏனைய வழிகளில் கொள்ளையடித்துத் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்ளும் நிலையில், ஏழை மக்கள் மின்சாரக் கட்டண உயர்வினால் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த 18 சதவீத அதிகரிப்பானது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழிவுக்கு இட்டுச் செல்வதுடன், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

(ஞான பிரசாந்தன்)

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »