நுவரெலியா மாவட்டம், ராகலை, டெல்மார் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் கேட்டறிவதற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் தோட்டப் பிரச்சினையை நாங்களே தீர்ப்போம் எனவும், வெளியில் இருந்து வேறு எவரும் இங்கு வரக்கூடாது எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தோட்டத்துக்கு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்களை மக்கள் சந்திக்ககூடாது என நேற்று முன்தினம் முதலே தீவிர பிரசாரத்தை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள், இன்றைய தினம் காலை முதலே குறித்த தோட்டப் பகுதியில் திரண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும், அவர்களால் அழைத்துவரப்பட்டவர்களுமே இவ்வாறு ஊடக சுதந்திரத்துக்கு , சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்டனர்.
மக்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துவிட்டோம், அதனை மீண்டும் கிளறவேண்டாம், தோட்டத்தில் இருந்து செல்லுமாறு முரண்பட்டனர். ஊடகவியலாளர்கள் தமது வருகையின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தனர்.
அவ்வேளையில் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதன்போது அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை, உடனடியாக பிரதேசத்தைவிட்டு வெளியேறுமாறு வலப்பனை பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அச்சுறுத்தினர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
