இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும்
அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனத்தை கைவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்தகட்ட உடன்படிக்கையை உடனடியாக எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்தை அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில், கட்சியின் ஆசிரியர் சங்கத்தை அமைப்பது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடலுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்சமயம் பிரச்சினைகள் இல்லை என்று காட்டிக் கொள்வதற்கு ஜனாதிபதி, நாடு முழுவதும் சுற்றி வந்து, போதிய அளவுக்கு டொலர்கள் கையிருப்பில் காணப்படுவதாக தெரிவிக்கிறார்.
ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் ஆபத்தான நிலை தொடர்பில் பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இது பற்றி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து யதார்த்தமான, உண்மையான புரிதல் மக்கள் மத்தியில் காணப்பட வேண்டும்.
நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பல் 8 பில்லியனாக அதிகரித்தாலும், மத்திய கிழக்கு யுத்தம் தொடர்ந்து நீடித்தால் அல்லது மோசமடைந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கு பொருளாதாரம் சரிந்தால் தொழிலாளர்களின் வேலைகள் இழக்கப்படும். இது தொடர்பில் அரசாங்கம் இன்னும் வாய் திறந்த பாடில்லை.
2022 இல் வங்குரோத்தடைந்த சமயத்தில் 92 ரக பெட்ரோல் ரூபாய் 470 ஆக காணப்பட்டது.
தற்சமயம் இந்த ரக பெட்ரோலின் விலை ரூ.410 ஆக காணப்படுகின்றது.
இந்த இலக்கங்கள், தரவுகளை பார்க்கும்போது மக்களுக்கு உண்மை நிலை புரிந்திருக்க வேண்டும்.
2027 மார்ச் மாதத்தில் IMF இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றது.
இதனால் ஏற்படும் தாக்கமும் மேலும் அதிகமாகும்.
இது நாட்டின் தரவரிசைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகையினால் தொடர்ச்சியான அடுத்தடுத்த IMF இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும்.
2028 ஆகும்போது இறக்குமதி 3 மாத வரையறை போலவே, ஆண்டுதோறும் வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துவது அமெரிக்க டொலர் 2.5 பில்லியனிலிருந்து 3.5 பில்லியனாக அதிகரிக்கும்.
இறக்குமதி செலவோடு வெளிநாட்டு கடனும் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்குத் தேவையான டொலர்கள் நாட்டுக்கு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எண்ணெய் விலை உயர்ந்தால் கைருப்புகள் கூட போதாது. மீண்டும் வங்குரோத்தடையும் அபாயம் காணப்படுவதனால் தொடர்ச்சியான அடுத்தடுத்த IMF இணக்கப்பாட்டிற்குச் செல்ல வேண்டும்.
தலைக்கன போக்கை கை விட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு மக்கள் நலன் சார்ந்த IMF இணக்கப்பாட்டை எட்டுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
பொய்யாலும், மாயையாலும் மக்கள் எதிர்பார்ப்புகளை இனியும் குழிதோண்டி புதைக்காமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
