25 மில்லியன் டொலர்கள் காணாமல் போனதற்கு யார் பொறுப்பு கூறுவது என்று முன்னாள் மத்திய மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்ட ஆலோசகருமான மைத்ரி குணரத்ன கேள்வி எழுப்புகிறார்.
கண்டியில் வைத்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் மக்களின் 25 மில்லியன் டாலர் பணம் தவறாக வைப்ப்பிலிடப் பட்டுள்ளது, அல்லது திருடப்பட்டோ தொலைந்தோ போயுள்ளது. இதுகுறித்து அரசாங்கத்திற்கோ அல்லது திறைசேரிக்கோ பாராளுமன்றத்திற்கோ முறையான அறிக்கையை கையளிக்க முடியவில்லை என்பது தெரிந்த விடயம்.
நாட்டில் உள்ள வங்கிகள் இந்த நாட்டு மக்களுடன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த நாட்டில் வணிகம் செய்யும் உள்ளூர் வணிகர்களைப் பாதுகாக்க வேண்டியது வங்கிகளின் ஒரு பொறுப்பாகும்.
வங்கிகள் மூலம் வணிகம் செய்யும் உள்ளூரிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்குக் கடன் வழங்குவதில் திட்டமான எந்த ஒரு முறைமையும் தற்போது இல்லை. வங்கிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ அல்லது மேற்பார்வையிடவோ மத்திய வங்கி எது வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. மத்திய வங்கி இவற்றைக் கவனிக்க வேண்டும்.
இலங்கையில் தற்போதுள்ள வங்கிகள் நாட்டின் அபிவிருத்திக்காகக் கடன் வழங்குவதற்குப் பதிலாக, திறைசேரிப் பத்திரங்களை திசை திருப்பும் நிலையே காணப்படுகிறது. மேலும், மற்றும் அரசின் சில அதிகாரிகள் செயல்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்
