(எம்.மனோசித்ரா)
மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய அரசாங்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களுக்குள் தலையிட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக அழித்து ஒரு சர்வாதிகாரப் பயணத்தை நோக்கி நகர்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றஞ்சுமத்தினார்.
பெலவத்தையின் நேரடித் தலையீட்டின் கீழ் மாகாணசபைகளும், பிரதேச செயலகங்களும் சிதைக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தைச் சுருக்கி, சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்ல முயற்சிக்கிறது. மாகாண சபைத் தேர்தலைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. தேர்தல் மேடைகளிலும் தங்களது கொள்கைப் பிரகடனத்திலும் குறிப்பிட்ட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது இரண்டு வருடங்களாகியும் தேர்தலை நடத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்டமைப்பில் தேர்தல் நடத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதற்குத் தேவையான சீர்திருத்தங்களையோ அல்லது ஆதரவையோ பாராளுமன்றத்தில் வழங்குவதாகத் தெரியவில்லை. பல்வேறு சாட்டுக்களைக் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கிறார்கள்.
தேர்தல்களை நடத்தாதது மட்டுமன்றி, பெலவத்தையின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் காணப்படுகிறது. இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் என்று எதுவும் இல்லை. பெலவத்தையின் சக்திகள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குள் நுழைந்து அவற்றின் சுயாதீனத் தன்மையை அழித்து வருகின்றன.
'நிலக்கரி ஆணைக்குழுவில் இருந்து இன்னும் சில மாதங்களில் நாங்கள் நிரபராதிகளாக விடுவிக்கப்படுவோம்' என்று அவர்களே கூறுகிறார்கள். இதில் எங்கே சுயாதீனத் தன்மை இருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
அதேபோல், உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். மேல் நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆவது திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை மேல் நீதிமன்றத்தில் 12 இல் இருந்து 20 ஆகவும், உச்ச நீதிமன்றத்தில் 11 இல் இருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த அமைப்பிற்குள் தலையிட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு சட்டத்தரணிகள் சங்கமும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஏன் இந்த சுயாதீன நிறுவனங்களுக்குள் தலையிடுகிறார்கள்? இவர்களுக்கு சுயாதீன நிறுவனங்களை வைத்திருக்க விருப்பமில்லை. அனைத்தையும் பெலவத்தையின் கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்தவே பார்க்கிறார்கள்.
இன்று மாகாண சபைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. ஜனாதிபதியின் ஆளுநர்களே இருக்கிறார்கள். அவர்கள் பெயரளவில் மட்டுமே ஆளுநர்களாக இருக்கிறார்கள். மாகாண சபைகள் முழுமையாகப் பெலவத்தையினால் நியமிக்கப்பட்ட நபர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.
இன்று ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் பெலவத்தையின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் ஆளுநர்களை விடவும் இந்த பெலவத்தையின் பிரதிநிதிகளுக்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக அழித்து, ஒரு சர்வாதிகாரப் பயணத்தை நோக்கியே இவர்கள் நகர்கிறார்கள். இந்தச் செயல்களுக்கு எதிராக நாம் மக்களை அணிதிரட்டுவோம், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மாகாண சபைத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை வழங்கி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தலைமைத்துவத்தைச் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்றார்.
