இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% வரை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நட்டத்துடன் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கால அட்டவணைகளை மாற்றி சேவைகளை மட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நிலைமை தொடர்ந்தால் பேருந்து கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
