முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக இன்று (07) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வந்திருந்த போதே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் கூறிய போதிலும், அவர் அதனை ஏற்கத் தயாராக இல்லை எனவும், தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், தற்போதும் ஒரு சந்தேகநபர் மட்டுமேயான சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகவும், அதில் எந்தவொரு நீதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக இன்று (07) அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தனர்.
அங்கு கருத்துத் தெரிவித்த சுரேஷ் சலேயின் மனைவி:
"எனது கணவர் நிரபராதி என்பது அனைவருக்கும் தெரியும் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன். எனவே, இவ்வாறு செய்வது மிகவும் அநீதியானது. ஏனெனில் இந்த நேரத்தில் அவரை ஒரு பலிக்கடாவாக்குவது நன்றாகத் தெரிகிறது. சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிலும் கூட இது மிகவும் மனிதாபிமானமற்ற நடத்தை என்று கூறப்பட்டுள்ளது. அவர் இப்போது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். எந்த வகையிலும் அதனை நிறுத்த அவர் விரும்பவில்லை. நாங்கள் அவரது மனதை மாற்ற நிறையப் பேசிப் பார்த்தோம். ஏனெனில் அவர் நிரபராதி என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்.
புலனாய்வுகளை மேற்கொள்ள முடியும், ஆனால் அதனை மனிதாபிமான முறையில் செய்ய வேண்டும் அல்லவா? ஏனெனில் அவர் மிகவும் கொடூரமான முறையில்தான் நடத்தப்பட்டுள்ளார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இத்தனை முப்பத்தெட்டு வருட காலம் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அவர், ஒரு முறை கூட பிள்ளையின் பாடசாலைக்குக் கூடச் செல்ல நேரம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் எப்போதும் நாட்டிற்காகவே அர்ப்பணிப்புடன் இருந்தார்.
அப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு, நாட்டிற்காக இவ்வளவு தியாகங்களைச் செய்த ஒரு மனிதருக்கு இப்படிச் செய்வது மிகவும் அநீதியானது. இந்த மோசமான நடத்தைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனது கணவரை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை. ஏனெனில் தான் எப்படியும் நாட்டிற்காக உயிரைக் கொடுக்கத் தயாரான ஒரு நபர் என்று அவர் கூறுகிறார். இவ்வாறான அநீதிக்கு எதிராக அவர் எப்படியும் நிமிர்ந்து நிற்பார்.
அவர் எப்போதும் நேர்மையாக இருந்த ஒரு மனிதர். எனவே எனது கணவரைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு உச்சகட்ட சேவை செய்ததை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, எப்படியாவது ஒரு வைத்தியசாலைக்காவது அவரைக் கொண்டு செல்ல முடிந்தால் அது பெரிய விஷயமாக இருக்கும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் அவர் இருக்கும் மனநிலையின்படி, 'என்னை வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லுங்கள்' என்று அவராகக் கூற முடியாது. எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள் என்று நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது அவ்வளவுதான்.
தயவுசெய்து உங்களால் முடிந்த உச்சகட்ட உதவியைச் செய்யுங்கள். சுரேஷ் நாட்டிற்காகச் செய்தது போல, இப்போது சுரேஷிற்காக நீங்கள் எழுந்து நிற்பதற்கான உங்களது சந்தர்ப்பம் இதுவாகும். ஏனெனில் அவரால் நாட்டிற்காக முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க முடிந்ததென்றால், இது உங்களுக்கான சந்தர்ப்பம். யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சுரேஷிற்காக நீங்கள் எழுந்து நில்லுங்கள். நான் கேட்டுக்கொள்வது அவ்வளவுதான்."
