Our Feeds


Saturday, June 6, 2026

Admin

உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகளை மறுத்த - காவல்துறையினர்!


முன்னாள் பாதுகாப்பு புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள போது நடத்தப்படும் விதம் குறித்து உதய கம்மன்பில சுமத்திய குற்றச்சாட்டுகளையே காவல்துறை இவ்வாறு மறுத்துள்ளது.

முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.

சுரேஷ் சல்லேவுக்கு தரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு செய்தித்தாளில் சிறிதளவு சோறும் முள்ளங்கி கறியும் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் எடுக்க முயன்றபோது அந்த உணவு தரையில் கொட்டிவிட்டதாகவும் கம்மன்பில குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்தால் சலே மன உளைச்சலுக்கு ஆளாகி, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள காவல்துறை, சலே தாக்கப்பட்டார் அல்லது மனிதநேயமற்ற முறையில் நடத்தப்பட்டார் என்ற கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளது.

காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற எந்தவொரு சந்தேக நபரைப் போலவே சுரேஷ் சலேயும் நடத்தப்படுகிறாரே தவிர, அவருக்கு எந்தவொரு சிறப்புச் சலுகையோ அல்லது வேண்டுமென்றே புறக்கணிப்போ காட்டப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்த விவகாரங்கள் தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியே சரிபார்க்கப்படாத கூற்றுகளின் அடிப்படையில் பகிரங்கமாக அறிக்கை விடுவது பொருத்தமற்றது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகள் உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல எனத் தெரிவித்த காவல்துறை, முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவருக்கு எந்தவொரு மனிதநேயமற்ற செயல்களும் இழைக்கப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »