Our Feeds


Sunday, June 7, 2026

Admin

சலேவை அவசர மருத்துவ சிகிச்சைக்காக இடமாற்றுங்கள் - சட்டத்தரணி மூலம் சிஐடி பணிப்பாளருக்கு கடிதம்!



உளவுத்துறையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கோரி அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்த்தன குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சட்டத்தரணி அசித் சிறிவர்தனவினால், சிஐடி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமது கட்சிக்காரரான சுரேஷ் சலேயின் உடல் மற்றும் உள நிலைமைகள் மோசமடைந்துள்ளன. எனவே, அவருக்கு மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்காக உடனடியாக தகுந்த வைத்தியசாலையொன்றில் அனுமதிப்பது அவசியமாகும்.

தகைமை வாய்ந்த மற்றும் சுயாதீனமான மருத்துவ நிபுணர்களின் கீழ் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சைகளை வழங்கக்கூடிய பொருத்தமான வைத்தியசாலைக்கு அவர் அவசரமாக மாற்றப்பட வேண்டும்.

மேலும், தனது இறுதி உயில் மற்றும் அது சார்ந்த ஏனைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, தனது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சுரேஷ் சலே கோரிக்கை விடுத்துள்ளதோடு இந்தக் காரணிகள் மற்றும் சூழ்நிலைகள் சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

அத்துடன், தனது நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறனை அவர் தற்பொது இழந்திருக்கலாம். அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சூழல், அவரது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்கமைய, சிஐடி பணிப்பாளர் மேற்படி கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அத்துடன் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின், தமது கட்சிக்காரருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசியலமைப்பு, குற்றவியல் அல்லது சர்வதேச மட்டத்திலான எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கான அடிப்படையாக இது பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »