(நமது நிருபர்)
பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஏ– டீம் நெக்ஸ்ட் வேவ் (A-Team Next Wave) என்ற புதிய அரசியல் கூட்டணியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், இந்த அறிமுகத்தை வழங்கியதோடு, அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக, சானக மதுகொட, அனுராத ஜயரத்ன மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை உருவாக்குவதே இந்த அணியின் முதன்மை நோக்கமாகும் என்றும், நாட்டின் தற்போது இடம்பெறும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதும், அவற்றுக்கான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதுமே தங்களது இலக்கு எனவும் அவர் அறிவித்துள்ளார்.
நாமலின் இந்த திடீர் அரசியல் நகர்வு, தற்போதைய எதிர்க்கட்சியின் ஏனைய கூட்டணிகளுக்குள் பெரும் குழப்பத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், முக்கிய அரசியல் தலைவர்களின் இரட்டை வேட நிலைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
குறிப்பாக, தற்போது புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹித அபேகுணவர்தன, பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ‘கூட்டு எதிர்க்கட்சி’ கூட்டங்களிலும் கலந்துகொண்டு, நாமலின் ஏ– டீம் உடனும் கைோரத்துள்ளார். அதேபோல், கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி கூட்டங்களுக்குத் தலைமை தாங்கிய அனுராத ஜயரத்னவும் நாமலின் அணியுடன் கைகோர்த்துள்ளார்.
ராஜபக்ஷ முகாமின் தூண்களாக விளங்கிய எஸ்.எம். சந்திரசேன, திலும் அமுனுகம, சன்ன ஜயசுமண, அநுராத யஹம்பத் மற்றும் மதுர விதானகே போன்றோர் தற்போது திலித் ஜயவீரவைச் சுற்றி அணிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
