Our Feeds


Tuesday, July 7, 2026

Zameera

நீர்கொழும்பு சிறைக் கலவரத்துக்கு காரணமானவர் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்


 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



இந்த நபர் 2016 ஆம் ஆண்டு நாரம்மல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அங்கு உதவியாளராக இருந்தவரையும் தாக்கி, கட்டிவைத்து, அங்குள்ள தூபியை சேதப்படுத்திய குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது.



நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் சந்தேகநபர்கள் என 2,400-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.



இருப்பினும், நேற்று (06) மற்றும் முன்தினம் (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களினால் 7 அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.



மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.



இதற்கிடையில், இன்று (07) காலை நிலவரப்படி, இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »