Our Feeds


Saturday, July 11, 2026

Zameera

சிறைக் கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு




 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. 


ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேனவிடம் நேற்று (10) கையளிக்கப்பட்டுள்ளது. 


கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு முறையான, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட வழிமுறையொன்றை பேணுவதற்காக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 


குறித்த அறிக்கையானது நேற்று நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. 


2025 ஜூன் 25 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தற்போதுள்ள அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் தற்காலிக ஏற்பாடுகள் உட்பட ஏனைய சட்ட கட்டளைச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை ஆராய்ந்து, சிறைச்சாலைத் துறையில் உள்ள நிர்வாக நடைமுறைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டது. 


சிறைச்சாலைகளில் தற்போதுள்ள அதிகளவிலான நெரிசலைக் குறைப்பதற்கும், கைதிகளை புனர்வாழ்வளிக்கும் முறைகளில் உள்ள பல்வேறு குறைபாடுகளைத் தவிர்த்து, சர்வதேச தரத்திற்கு அமையக்கூடிய சிறைச்சாலை அமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு முதற்படியாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. 


இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து, பொருத்தமான முறையில் செயல்படுத்துவது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »