முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா? தற்கொலையா என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும். தற்போதைய நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் தற்போது தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அவரது மெய்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிரப்பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மரணமடைந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன்.
அவ்வாறான நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது கூற முடியாது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான தீர்மானத்துக்கு வரமுடியும்.
எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் விடயத்தில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் குறித்த விடயத்தினை வைத்து அரசியல் சுயலாபம் தேடுவதற்கு முயற்சிகின்றன என்றார்.
