பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில்
ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது.நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை தொடர்பாக, பாராளுமன்றத்திலும் வீதியிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் நோக்கி போராட்டம் நடத்தப்பட்டது.
பிரதமர் இல்லம் எதிரிலேயே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
மாலை சுமார் 6:40 மணி அளவில், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து பேருந்துகள் மூலம் அங்கிருந்து அழைத்துச் சென்றது.
இந்தத் திடீர் கைது நடவடிக்கையால் புதுடெல்லியின் முக்கியப் பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
