Our Feeds


Tuesday, August 4, 2026

ShortNews

வட்டவளையில் கடந்த 04 நாட்களில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு!


கடந்த 04 நாட்களில் வட்டவளைப் பகுதியில் 661 மில்லிமீற்றர் அளவிலான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தற்போதைய வானிலை நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரு நாளில் மட்டும் அப்பகுதியில் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இது நேற்று (03) பதிவான மிக உயர்ந்த மழைவீழ்ச்சி அளவாகும்.

இது தவிர, அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 03 நாட்களில் 150 மில்லிமீற்றர் முதல் 500 மில்லிமீற்றர் வரையான உயர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய காலநிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக மிகவும் குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிாவது தற்போது சாதாரண நிலமையாக மாறியுள்ளதாகக் கலாநிதி வசந்த சேனாதீர மேலும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்த நிலைமையை முன்னர் பதிவான 'திட்வா' சூறாவளி காலத்தில் நிலவிய நிலைமையுடன் ஒப்பிட முடியாது என்றும், 'திட்வா' தாக்கம் நிலவிய காலத்தில் இதைவிட குறிப்பிடத்தக்க அளவு உயர் மழைவீழ்ச்சி பதிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையகப் பகுதிகளில் பெய்து வரும் இந்த அதிக மழைவீழ்ச்சியுடன் மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதால், அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் வானிலை அறிவிப்புகள் குறித்து தொடர் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »