நாட்டிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின்
முக்கிய புள்ளியான 'கஞ்சிபானை இம்ரான்' விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலர் அபாயகரமான குற்றவாளிகளுடனும், புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குற்றம் சுமத்திய பிரதி அமைச்சர், அந்த காலப்பகுதியில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான குற்றவியல் வலைப்பின்னல்களின் தலைவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பாதாள உலகக் குழுவினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபாயகரமான குற்றவாளிகளை நாட்டிற்குத் திரும்ப அழைத்துவருவதற்குப் பாரிய பிரயத்தனம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது சட்டவாட்சியின் அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
