Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

விவசாயிகளை அரசு கைவிட்டுள்ளது - சஜித்


விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மதவாச்சிய தேர்தல் தொகுதியின் எலவக பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க வேலைத்திட்டத்தின் கீழான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளையும் அரசாங்கம் பறித்துள்ளதாக சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்குவதாகவும், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதாகவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும், அவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பது, துறைமுகத்தில் இறக்கப்படும் விலையில் எரிபொருளை வழங்குவது, 12 இலட்சம் ரூபாவுக்கு விற்ஸ் ரக கார்களை வழங்குவது மற்றும் குறைந்த விலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 30 முதல் 40 சதவீதமான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டு வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்படுவதால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் இழக்கப்படுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும், நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 220 இலட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யானை – மனித மோதல் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் நடமாடும் நூலகங்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »