மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கலுக்காக முறையான வழிமுறைகளை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெகுவிரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகள், குழுவின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்குப்பற்றலுடன் வெலிகட மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை ஆயுள் தண்டனையாக குறைக்கவும்,ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கலுக்காக முறையான வழிமுறைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுப்பெற்ற நீதியரசர் எஸ்.துரைசாரா தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழு கடந்த 10 மாத காலமாக மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான திட்டமிடலுக்கு அமைவாகவே தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கலின் போது முறையான வழிமுறைகளை தயாரித்தல்,மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளின் தண்டனை காலத்தை ஆயுள் தண்டனையாக குறைத்தல், ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டு காலம் வரை குறைத்தல்,கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்கல். ஆகியன குழுவின் பிரதான பரிந்துரைகளாகும்.
அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வழங்கல் தாமதிக்கப்பட்டுள்ளதால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பகுப்பாய்வு அறிக்கையை விரைவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
