தித்வா புயலின் தாக்கத்தின்போது மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மிகுந்த கவனத்துடன் பின்பற்றுமாறும், நிலைமைகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கனமழை, நிலத்தின் ஈரப்பதன் அதிகரிப்பு மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மலைச்சரிவுப் பகுதிகளின் நிலைமை காரணமாக மீண்டும் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும், நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்தல், நீர் ஊற்றுகள் திடீரென தோன்றுதல், மண் நகர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, அவசர நிலைமைகளில் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
