Our Feeds


Wednesday, August 5, 2026

ShortNews

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - மரிக்கார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை போன்று தாக்குதலுடன் தொடர்புடைய சூழ்ச்சிதாரர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற  இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை தடுக்கத் தவறினார்கள் என தெரிவித்தே  இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த தாக்குதலை தடுக்கத் தவறியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதை போன்று இதில் சூழ்ச்சி செய்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

குழுவொன்று இந்த தாக்குதலை திட்டமிட்ட காரணத்தினாலேயே அவர்களால் தாக்குதலை தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் திட்டமிட்டவர்களுக்கு தண்டனை வழங்காமல் தடுக்கத் தவறியவர்களுக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை தவறு என்று கூறவரவில்லை.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளது என்பது உறுதியாகியுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் தடுக்கத் தவறியவர்களுக்கு மட்டுமன்றி சூழ்ச்சி செய்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும். சஹரானை வழிநடத்தியவர்களும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் அரசாங்கம் மேலதிக வருமானத்தை தேடிக்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் இந்த மேலதிக வருமானத்தை தேடிக்கொள்ள அரசாங்கம் வரிகளை அதிகரித்து  சாதாரண மக்களுக்கு எவ்வறான அழுத்தங்களை கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அத்துடன் அரசாங்க்ததுக்கு 71 பில்லியன் மாத்திரமல்ல, அதனையும்விட அதிக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில், அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய நிதி, செலவிடப்படாமல், அவ்வாறே திறைசேரிக்கு மீள அனுப்பப்படுகிறது. 

அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் நிதி முகாமைத்துவம் செய்து, மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிப்பதில் எந்த  உண்மையும் இல்லை. மாறாக அமைச்சுகளுக்கு ஒதுக்கிய பணத்தை எந்த அபிவிருத்தி செய்யாமல் முகாமைத்துவம் செய்து, திறைசேரிக்கு பெற்றுக்கொண்டுள்ளது என்றே தெரிவிக்க வேண்டும்  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »