இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க இதனைத் தெரிவித்தார்.
"நமது குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது. அதை நாம் 'குடல்-மூளை அச்சு' (gut-brain axis) என்று கூறுகிறோம். அதாவது நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது பதற்றத்தில் இருந்தாலோ, அது தானாகவே நமது குடலிலும் உணரப்படும். இந்தச் சிக்கலான செயல்முறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுப் பிரச்சனைகள் ஆகியவற்றின் சேர்க்கையால் IBS (Irritable Bowel Syndrome - எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) நிலை ஏற்படலாம். இந்த நிலை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கை முறை இப்போது மாறியுள்ளது; உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவு முறையிலிருந்து பல இளைஞர்கள் விலகி, இலகுவாகக் கிடைப்பதால் செயற்கை உணவுகளை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். இதன் காரணமாக, அவர்களிடம் தற்போது IBS நிலை அதிகமாகக் காணப்படுகிறது." என்றார்.
