முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினர் தொடர்பான வழக்கொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது கொழும்பு கறுவாத் தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, விசாரணைகளை மேற்கொள்ளும் கறுவாத் தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு, ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கமைய, இந்த வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் குறித்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
