Our Feeds


Tuesday, September 1, 2026

Zameera

நேபாளத்தில் பேரழிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு


 நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது.




திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, கடந்த மாதம்-


 26ஆம் திகதி லெண்டே நதியில் ஏற்பட்ட வெள்ளம் போடே கோஷி நதியில் பெருக்கெடுத்தது. இதனால் கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.




போடே கோஷி நதியின் வெள்ளம் திரிசூலி மற்றும் நாராயணி நதிகளிலும் கலந்ததால் ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோர்கா மற்றும் தனாஹு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.




வெள்ளத்தில் 85 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 320 வெளிநாட்டவர்கள் உட்பட 4,250 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதனிடையே, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டக் ஆற்றில் அடையாளம் காணப்படாத மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டு நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.




மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா பகுதியில் சிக்கியிருந்த மூன்று இந்தியர்களை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக நேபாளத்துக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.




வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »