Our Feeds


Tuesday, September 8, 2026

Zameera

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இலங்கை விஜயம்


 இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். 


ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார். 


கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையொப்பமிடப்பட்ட இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 


இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வருவது ஒரு சிறப்பு அம்சமாகும். 


இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தையொட்டி கொழும்பு நகரைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. 


இதன்படி, இந்த விஜயத்தின் போது ராஜ்நாத் சிங் பயணிக்கும் நேரங்களில் கொழும்பு நகரின் பல முக்கிய வீதிகளில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப போக்குவரத்து வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »