சந்தையில் விற்பனையாகும் சில குழந்தைகளுக்கான டயப்பர்களைப் பயன்படுத்தும்போது அவை கிழிவது மற்றும் மக்கிப் போவது தொடர்பாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
குறித்த விசாரணைகளின் போது, அத்தொடர்புடைய டயப்பர்களின் விநியோக வழிமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பின்தொடர் நடவடிக்கைகளின் பலனாக, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வணிக இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்களைக் குறிப்பிடாமல், 85ஆம் இலக்க கட்டளையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமை மற்றும் மொத்தமாக விநியோகித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொட்டாவை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை டயப்பர்கள் போன்ற சுகாதாரப் பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, பொதியில் குறிப்பிட்டுள்ள இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புடைய லேபிள் தகவல்களைச் சரியாகப் பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
பயன்படுத்தும்போது கிழிதல் அல்லது வேறு ஏதேனும் தரக் குறைபாடுகள் ஏற்படுமாயின், அத்தொடர்புடைய பொதி மற்றும் பற்றுச்சீட்டை பத்திரமாக வைத்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
