Our Feeds


Tuesday, September 8, 2026

Zameera

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் நாளை மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து


 இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


 


இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


 


இதன்படி, இலங்கை மற்றும் இந்திய மாணவர் படைப் பிரிவுகளுக்கு இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய பாதுகாப்புக்கல்லூரி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு பீடத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை இலவசமாக பராமரித்து தருவதற்கான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களிலேயே நாளை கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.


 


இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று மாலை இந்திய சமூகத்தினரை சந்திக்கவுள்ளதுடன், நாளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரையும் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »