வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
வறட்சியான வானிலை காரணமாக இந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் உள்ள 113,354 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதில் அதிகபட்ச பாதிப்பு மொனராகலை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 நபர்களுக்கும், பதுளை மாவட்டத்தில் 5,435 குடும்பங்களைச் சேர்ந்த 20,418 நபர்களுக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வறட்சியான வானிலை காரணமாக இதுவரை 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்ச பாதிப்பு மொனராகலை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.
மேலும் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் வறட்சியான வானிலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
