Our Feeds


Showing posts with label #New. Show all posts
Showing posts with label #New. Show all posts

Tuesday, October 22, 2024

Zameera

சீன அரசாங்கம்: 30 மில்லியன் ரூபா நிவாரணம்


 அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.

மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன

Tuesday, August 27, 2024

Zameera

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை


 தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்சங்கங்களின் 37வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

“உங்கள் அனைவருக்கும் தெரியும், தற்போதைய சீர்திருத்த செயல்முறையானது பொருளாதாரத்தை அதன் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது, இது நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கு அவசியம்.

இந்த சீர்திருத்தங்கள் குறுகிய காலத்தில் வேதனையளிக்கும் என்றாலும், நீண்ட கால தாமதமான இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பும் பொருளாதாரத்தை நிலையான மற்றும் விரிவான வளர்ச்சியின் பாதையை நோக்கி வழிநடத்த முக்கியமானது.

அத்தகைய முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், எந்தவொரு அரசியல் அல்லது சமூக நிச்சயமற்ற தன்மை அல்லது கடின முயற்சிகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் தலைகீழ் மாற்றமானது, மறுசீரமைப்பு செயல்முறைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் போக்கை மாற்றும் மற்றும் பொருளாதாரத்தில் மாற்ற முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு சமூக நெருக்கடி ஏற்படலாம்.

தற்போதைய இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போன்று அதிக செலவினங்கள் மற்றும் வரிக் குறைப்புக்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் நிதி இடமில்லை.

நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீண்டும் நிறுவுவது இப்போது மற்றும் எதிர்காலத்திற்கான முதன்மைத் தேவையாகும்.”

Saturday, August 24, 2024

Zameera

சீனாவில் மோசமான வானிலை: 11 பேர் உயிரிழப்பு


 சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 14 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பெய்த கனமழையால் இந்த அனர்த்த நிலைமை பதிவாகியுள்ளது.

வெள்ள அபாயம் காரணமாக, மாநிலத்தில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

Sunday, August 11, 2024

Zameera

அரசியலுக்கு மக்கள் கருத்து அவசியம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.



மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாதெனக் கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் அசல் எனத் தெரிவித்துள்ளார்.       பொலனறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவ மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Monday, July 22, 2024

Zameera

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார் - அஞ்சல் திணைக்களம்


 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னர், தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடைபெறும்.

 

அந்த வகையில், தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை அஞ்சல் திணைக்களம் ஆரம்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, June 6, 2024

Zameera

இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்க வேண்டும் - சஜித் பிரேமதாச


 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இந்தியத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றும் போதே எதிரக்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
அடுத்தடுத்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும், மீண்டும் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். இலங்கை இந்தியா இடையே நெருக்கமான நட்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதனால் உலகில் அதிகளவான சனத்தொகையை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்படுவது முக்கியமாகும். குறிப்பாக உலகளாவிய அதிகார கேந்திரநிலையமாக உள்ள இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது உண்மையிலேயே செயற்படுத்தப்பட வேண்டியதே இந்த பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இதனால் இந்த யோசனையை நான் முன்வைக்கின்றேன்.

பிரதமர் மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகளவான பிரதிநிதித்துவத்தை வென்று அடுத்தடுத்து ஆட்சியை பெற்றுக்கொண்டுள்ளார். இது இலகுவானது அல்ல. வரலாற்று நிகழ்வாகும். இதனால் பிரதமர் மோடியிடம் இருந்து நாங்கள் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த போது மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் செளபாக்கியம் என்ற அடிப்படையில் பொருளாதாரத்தை உயர்தியுள்ளார் இதன்படி அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.