பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் விசாரணைக்கு இன்று (21) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி இரு மாதங்களிற்கு மேலான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் சிலர் இரு கிழமைக்கு முன்னர் விளக்கமறியலில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்போது சந்தேக நபர்கள் 14 பேருக்கும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை செப்ரம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
(அம்பாறை நிருபர் ஷிஹான்)
