ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான கபீர் ஹாசிம் , சாகல
ரத்நாயக்க ஆகியோர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த
விவகாரம் தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க கடும் அதிருப்தியை
வெளியிட்டுள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் நடந்த ஐ தே க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசிய நவீன் , இப்படியான செயற்பாடுகள் கட்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துமென குறிப்பிட்டுள்ளார்.
தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத ஒரு சமயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது வீட்டுக்கே வந்ததாகவும் அதனால் நன்றிக்காக கோட்டாவை பார்க்க சென்றதாகவும் இங்கு குறிப்பிட்டுள்ள அமைச்சர் சாகல , இரவில் செல்லாமல் பகல் வேளையிலேயே கோட்டாபயவை பார்க்க சென்றதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ரணில் , கரு, சஜித்
ஆகிய மூவரும் ஒன்றாக கூடிப் பேசி தீர்மானிக்க வேண்டுமென நேற்றைய கூட்டத்தில்
யோசனையொன்று முன்வைக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்தவர்கள்
அநாதரவான நிலையில் இருப்பதால் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பது நல்லதென விஜித்
விஜிதமுனி எம் பி இங்கு தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகளை கேலி செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில
பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் கடும் அதிருப்தியை
வெளியிட்ட சத்துர சேனாரத்ன எம் பி , அப்படியானால்
ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியொன்றை இறக்க வேண்டிவருமென தெரிவித்துள்ளார்.
