சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தகவல்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த தகவல்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம், (U.S. Federal Trade Commission) விதிகளை மீறியதற்காக யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாயாகும்.
இதற்கு அந்நாட்டு நீதித்துறை ஒப்புதல் வழங்கினால், சிறுவர்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தொகை கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
