ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவியை ஜப்பானிடமிருந்து சவூதி அரேபியா நேற்று (01) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அடுத்த வருடம் நவம்பர் 21, 22 ஆம் திகதிகளில் இதற்கான மாநாட்டை சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் பங்கு பற்றவுள்ளன.
இந்த மாநாட்டையொட்டிய நூறு விஷேட வைபங்களையும் சவூதிஅரேபியா நடாத்தவுள்ளது. வரலாற்றில் அரபு நாடு ஒன்றுக்கு ஜீ 20 அமைப்பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவைாகும்.
சவூதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், சவூதியின் நடத்தைகள் தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையிலும் ஜீ 20 தலைமைப் பதவியை சவூதி அரேபியா பொறுப்பேற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், சில விடயங்களில் ஜீ 20 அங்கத்துவ நாடுகள் சவூதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் தொடர்பான உரிமைகள், ஊடகவியலாளர்கள், சுதந்திர செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படலாமென அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெண்கள் வாக்களிக்கும் உரிமைகள், வாகனம் ஓட்டுவதற்கான உரிமை, வெளியிடங்களில் நடமாடும் சம சந்தர்ப்பங்களை சவூதிஅ ரேபியா வழங்க வேண்டுமென்ற அழுத்தங்கள் நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், சில விடயங்களை அண்மைக் காலமாக சவூதிஅரேபியா தளர்த்தியமை தெரிந்ததே.
மேலும் மிக நீண்டகாலமாகத் தொடரும் மன்னராட்சியை விடுவித்து ஜனநாயக தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டுமெனக் குரல் கொடுக்கும் பலரை சவூதி அரசாங்கம் கைது செய்து, சிறையில் அடைத்து வைத்துள்ளமையும் பெரும் விமர்சனங்களாகி, சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சவூதிஅரேபியாவின் முடியாட்சிக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொல்லப்பட்டதில் சர்வதேசத்தின் சந்கேம் சவூதிஅரேபியாவின் பக்கமே திரும்பியிருந்தது. இந்நிலையில் ஜீ 20 அமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்ற சவூதி அரேபியா இச்சந்தேகங்களைப் போக்க வேண்டிய கடப்பாடுகளுக்குள் வந்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜீ 20 அமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்றது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள சவூதி அரேபியாவின் முடிகுரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்:
சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கிச் செல்லும் வகையில் பல்வகைத் தன்மையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளைத் திருப்திப்படுத்தும் வகையில், நவீனத்துவம் என்ற போர்வையில், இன்னும் பல நுாதன மாற்றங்களை சவுதியில் எதிர்காலத்தில் காண முடியுமாக இருக்கும் என சர்வதேச விமர்சகர்கள் ஹேஸ்யம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
