Our Feeds


Tuesday, December 24, 2019

www.shortnews.lk

26ம் திகதி வலைய சூரிய கிரகணம் - இலங்கையில் எப்பகுதிகளுக்கெல்லாம் தென்படும்?

 

இலங்கையில் இம்மாதம் 26ஆம் திகதி நெருப்பு வளையச் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் முழுமையாகவும் கிளிநொச்சிக்கு தெற்குப் பக்கமாக வாழ்பவர்கள் அதன் ஒரு பகுதியைப் பார்வையிடலாம் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.


இம்மாதம் 26ஆம் திகதி சவூதி அரேபியாவில் முதலில் தென்படும் சூரிய கிரணம் காலை 8 மணியளவில் தோன்றி, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்னிந்தியா முழுவதும் பயணித்து வடக்கு இலங்கை வழியாகக் கடந்து செல்கிறது. இந்தக் கிரகணம் நிகழும்போது, சந்திரன் பூமியிலிருந்து சுமார் 400,000 கி.மீ தூரத்தில் இருக்கும். மணிக்கு 3,600 கி.மீ வேகத்தில் நகரும்.

குறித்த கிரகணத்தின் மையக் கோடு மன்னார் முதல் வக்கரை வரை இயங்குகிறது. இலங்கைக்கு மன்னார் பகுதிக்குள்ளால் நுழையும் கிரகணம் யாழ்ப்பாணத்தில் காலை 9.34 மணிக்குத் தெரியும். இது நான்கு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். 9.38 மணிக்கு முடிவடைந்துவிடும்.

கடந்த 2010 ஜனவரி 15 இல் கடந்த சூரிய கிரகணம் யாழ்ப்பாணத்தில் சுமார் 10 நிமிடங்கள் காணப்பட்டது. ஆனால் இந்த முறை இது 4 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். 
சவூதி அரேபியாவில் தொடங்கும் இந்த வருடாந்த கிரகணம் வடக்கு இலங்கை மீதும், மீண்டும் இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தோனேசியாவுக்கும் சென்று மதியம் 12.20 மணிக்கு முடிவடைகிறது. 
கிளிநொச்சியில் இருப்பவர்களுக்கு கிரகணத்தின் ஒரு பகுதியையே பார்க்க முடியும்.  
அநுராதபுரத்தில் வசிப்பவர்கள் சூரியனின் 87% சந்திரனால் மூடப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.  
கொழும்பில் உள்ளவர்கள் சூரியனின் 84% மூடியிருப்பதைக் காண்பார்கள்.
அத்துடன், சவுதி அரேபியா, கட்டார், இந்தியா, சுமாத்ரா, போர்னியோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தென்படும். ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் உள்ள ஸ்கைவொட்சர்ஸ் (Skywatchers)  ஒரு பகுதி கிரகணத்தைக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »