தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை மற்றும் தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அந்த கட்சியின் தலைமைத்துவம் எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.பௌசி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அந்த கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் ஒழுக்காற்று குழு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சுமத்தி சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு ஊடாக தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தாக ஊடகங்களில் மூலம் அறிந்துக்கொண்டதாக பௌசி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அந்த கட்சி தனக்கு அறிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு ஒழுக்காற்று விசாரணையையும் நடத்தாமல் தன்னை கட்சியில் இருந்து நீக்கி அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும் அதனை வலுவிழக்கச் செய்யுமாறு ஏ.எச்.எம்.பௌசி உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
