சவுதி அரேபிய வரலாற்றில் மிக பெரிய இசை நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை ரியாதில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதல் நாள் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 130000 ம் பேர் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான சவுதி அரேபிய பெண்கள் தமது தலையை மறைக்கும் புர்காவோ, அல்லது அதற்கொப்பான ஆடைகளோ அணிந்திருக்க வில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய மார்க்கத்தின் புனித தளங்களான மக்கா மற்றும் மதீனா நகரங்களை கொண்ட சவுதி அரேபியா கடந்த காலங்களில் இஸ்லாத்திற்கு எதிரான, சமூக சீரழிவை உண்டாக்கும் சினிமா, இசைக் கச்சேரிகள், சினிமா டியேட்டர்கள் ஆண் பெண் கலப்பு நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடைகளை ஏற்படுத்தியிருந்தது. முஹம்மத் பின் ஸல்மான் இளவரசராக அறிவிக்கப்பட்டது முதல் சவுதி அரேபியா தனது இஸ்லாமிய வரை முறைகளை தவிர்த்து மேற்கத்தேய கலாசாரங்களுக்கு வழியேற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நாட்டின் மிக முக்கிய நகரங்களாக ரியாத், ஜித்தா போன்ற நகரங்களில் சினிமா டியேட்டர்கள், இசைக் கச்சேரிகள் என்பன பகிரங்கமாக நடத்துவதற்கு சவுதி அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்லாத்தை நேசிக்கும், ஒழுக்கமான சமூக உருவாக்கத்தை விரும்பும் சாரார் மத்தியில் சவுதி அரேபியாவின் அண்மைக் கால போக்கு கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.







