Our Feeds


Thursday, January 9, 2020

www.shortnews.lk

ரஞ்சன் ராமனாயகவின் தொலைபேசி உரையாடல்கள் இணையத்தில் கசிந்தது எப்படி? - பொலிஸ் தலைமையகம் விளக்கம்

 



ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெவ்வேறு நபர்களால் மற்றும் சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ள தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் பொலிஸாரால் வௌியிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதற்காக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் வௌியானமை தொடர்பில் அவற்றை வைத்திருந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கடந்த ஜனவரி 02 ஆம் திகதி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வௌிப்புற வன்வட்டு ஒன்றை ஒப்படைத்திருந்தார்.

வாடகைக்கு பயணித்த நபரொருவர் குறித்த வன்வட்டினை மறந்து முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளதாக குறித்த நபர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

குறித்த வன்வட்டினை பரிசோதித்த போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக, இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ், ரகசிய பொலிஸின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நீதிமன்றம் மற்றும் பொலிஸுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் மேற்கொண்ட உரையாடல்கள் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவை கொலை செய்வதற்காக ஆயுத பயிற்சியில் ஈடுபடுவதாக தொலைப்பேசி உரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதனை அடிப்படையாக கொண்டு குறித்த வன்வட்டின் முதல் பிரதி மற்றும் வேறு சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையுடன் கடந்த 04 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 127 தோட்டாக்கள், இரண்டு மடிக்கணினிகள், 4 வௌிப்புற வன்வட்டுக்கள், 05 வன்வட்டுக்கள் 164 டிவிடி இறுவட்டுக்கள், வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் விபரங்கள் அடங்கிய இரு மனுக்கள் மற்றும் கைப்பேசி ஒன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்திருக்க வேண்டிய 23 தோட்டாக்கள் காணாமல் போயிருந்ததன் ஊடாக அவர் குற்றம் புரிந்துள்ளாரா என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவை வழக்கு சான்றுப் பொருட்கள் என்ற ரீதியில் எதிர்வரும் தினத்தில் நீதிமன்றில் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »