தேசிய அடையாள அட்டை ஒருநாள் விநியோக சேவை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில் முதல் கட்டமாக பத்தரமுல்லையிலுள்ள தலைமையக அலுவலகத்தில் றாளாந்தம் 250 பேருக்கும் காலியிலுள்ள அலுவலகத்தின் மூலம் 50 பேருக்கும் ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டையை பெறவிரும்புவோர் முதலாவதாக விண்ணப்பபடிவத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் உறுதி செய்து பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து சமூகமளிக்கக்கூடிய வசதியான திகதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு அந்த அலுவலகத்தில் அதற்கான இலக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் அத்தோடு குறிப்பிட்ட திகதியில் குறிப்பிட்ட நேரத்தில் திணைக்களத்திற்கு விஜயம் செய்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
காய்ச்சல் தடிமல் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தேசிய அடையாள அட்டை ஒருநாள் விநியோக சேவைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், கடவுச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, தேசிய அடையாள அட்டைகளை விரைவாக பெற வேண்டிய தேவைகளை கொண்டவர்களுக்காக, அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் பிரதேச செயலகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
