பொதுத் தேர்தலில் போட்டியிடாது அரசியல் வாழ்க்கையில்
இருந்து விலகி தனது குடும்பத்தாருடன் சுதந்திரமாக வாழ உத்தேசித்து உள்ளதாக
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித்த தேவரப்பெரும நேற்று
முன்தினம் களுத்துறையில் தெரிவித்தார்.
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மத்துகமை
பொலிஸாரினால் தொடர்ந்து தனக்கும் தனது கும்பத்தினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு
வரும் அரசியல் பழிவாங்கல் தொடரும் பட்சத்திலே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்
கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,...
மூன்றாவது முறையாகவும் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில்
தனது வீட்டுக்கு வந்த மத்துகமை பொலிஸார் எசல போயா தினத்தன்று நடைபெற்ற வைபவத்தில்
கட்டவுட் ஒன்றை கிழித்தெறிந்ததுடன் இதற்கு முன்னரும் இதேபோன்று தனது கட்சி
காரியாலயத்தை உடைத்துள்ளனர்.
இது தொடர்பில் மத்துகமை வலய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு மூன்று முறை
முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் ஒன்றும் நடக்கவில்லை.
மேலும் தான் அரசியல் ரீதியாகவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ எவ்விதமான
தவறுகளையும் செய்யவில்லை. சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக
செயல்பட்ட போது அவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அவருடன் இணைந்து செயல்பட்டேன். இதன் காரணமாக ஐக்கிய
மக்கள் முன்னணியின் வாக்குகளை சிதறடிக்க, படுதோல்வியைத்
தழுவ நேரிடும் என்ற பயத்தில் ஐக்கிய மக்கள் முன்னணியின் ஒரு சில கைக்கூலிகள் பின்
நின்று மேற்கொள்ளும்
செயற்பாடுகளாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.
இச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கும் தேர்தல்
ஆணையாளருக்கும் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
