'இரவு முழுவதும் சார்ஜ் போடப்பட்டிருந்ததால், செல்போன் வெடித்திருக்கலாம்' என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தீவிபத்தில் முத்துலட்சுமி படுக்கையருகே எலி ஒன்றும் கருகி இறந்துகிடந்தது.
இரவு முழுக்க சார்ஜர் போடப்பட்ட செல்போன் வெடித்ததில், தாய் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் என்று மூன்றுபேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கரூர் மாவட்டம், ராயனூர் தமிழ் நகர் பகுதியில் வசித்துவந்தவர் முத்துலெட்சுமி. கணவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு கார்ணமாக, தன் ரட்சித், தட்சித் என்ற இரண்டு மகன்களோடு தனியே வசித்துவந்தார். முத்துலட்சுமி, தன் மகன்களோடு நேற்று இரவு வீட்டில் உறங்கியுள்ளார். முத்துலட்சுமி தனியறையிலும், அவரின் மகன்கள் வேறு ஒரு அறையிலும் உறங்கியிருக்கிறார்கள். முத்துலட்சுமி நேற்று இரவு தூங்கும்முன், தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு, தலையணை அருகிலேயே வைத்துவிட்டு உறங்கியுள்ளார்.
அவரின் மகன்கள் இருவரும் அருகில் உள்ள அறையில் உறங்கி வந்துள்ளனர். இந்நிலையில், செல்போன் இரவு முழுவதும் சார்ஜ் போட்டு வைக்கப்பட்டிருந்ததால், தீடீரென பயங்கர சத்தத்துடன் இன்று அதிகாலை வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், செல்போன் அருகில் படுத்துறங்கிக்கொண்டிருந்த முத்துலட்சுமியின் மீது வேகமாக நெருப்பு பரவி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதற்குள், சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் முத்துலட்சுமி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். செல்போன் வெடித்ததால் வீட்டில் தீ பரவிய நிலையில், அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர். ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த அவர்கள் உடனடியாக விரைந்து வீட்டுக்குள் சென்று, புகைமண்டலத்துக்குள் சிக்கிய முத்துலெட்சுமியின் மகன்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே இரண்டு சிறுவர்களும் மூச்சுத் திணறலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
'இரவு முழுவதும் சார்ஜ் போடப்பட்டிருந்ததால், செல்போன் வெடித்திருக்கலாம்' என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தீவிபத்தில் முத்துலட்சுமி படுக்கையருகே எலி ஒன்றும் கருகி இறந்துகிடந்தது. இதுகுறித்து, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் வழுக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறனர். செல்போன் வெடித்து ஒரே குடும்பத்தில் தாய், மகன்கள் உள்ளிட்ட மூன்றுபேர் உயிரிழந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


