ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் 330 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என அமெரிக்க ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிரவுண் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டில் ஆப்கானில் சுமார் 700 பொதுமக்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
செப்டெம்பர் 11 தாக்குதல்களையடுத்து, ஆப்கானில் அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட 2001 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் வான் தாக்குதல்களில் அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் கடந்த வருடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேற்படி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முன்பைவிட குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்கப் படையினரே உள்ளமையும் வான் வழித் தாக்குதல் அதிகரித்தமைக்கான ஒரு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தலிபான்களை பேச்சுவார்ததை மேசைக்கு வர அழுத்தம் கொடுப்பது இத்தாக்குதல்கள் அதிகரிப்புக்கு மற்றொரு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
