பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ், இவ்வருட நத்தார் (கிறிஸ்மஸ்) பண்டிகையை முன்னிட்டு, வத்திகானின் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு தடிமன், காய்ச்சலுக்கான மருந்துகள் அடங்கிய பெட்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
வழக்கத்துக்கு மாறான இந்த அன்பளிப்புப் பொருட்களை ஏற்கெனவே வத்திகானின் 4,000 ஊழியர்களுக்கு பாப்பரசர் அனுப்பியுள்ளார் என வத்திகான் வட்டாரமொன்று உறுதிப்படுத்தியதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
தடிமன் மற்றும் காய்ச்சலுக்கான குளிசைகள் அடங்கிய பெட்டிகள், ‘வத்திகான் ஊழியர்களுக்கு புனிதத் திருத்த்நதையின் அன்பளிப்புகள்’ என குறிப்பு பொறிக்கப்பட்ட நிலையில் அடுககி வைக்கப்பட்டிருப்பதை இல் மெசேஜெரோ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
யதார்த்தபூர்வமாக செயற்படுபவராக புகழப்படும் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ், குளிர்கால காய்ச்சலை சமாளிப்பதற்காக நத்தார் பரிசாக பரசிட்டோமல் போன்ற மருந்துகளை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலிய தலைநகர் ரோமில், குளிர் மற்றும் மழையான காலநிலை நிலவுகிறது. இவ்வருடம் இன்புளூவென்சா காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து இத்தாலியை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை சமாளிப்பதற்கு இத்தாலிய சுகாதார பராமரிப்புத்துறை ஏற்கெவே தடுமாறும் நிலையில், ஜனவரி மாதம் இன்புவென்ஸா காய்ச்சல் பரவல் அத்துறையின் சிரமங்களை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
