(செ.தேன்மொழி)
களனி, திஹாரி மற்றும் வத்தளை பகுதிகளில் வைரஸ் பரவலின் புதிய கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அதனை வெற்றிகொள்வதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கம்பஹா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மினுவாங்கொட மற்றும் பேலியகொடவை அண்மித்த பகுதிகளில் கொவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ,கம்பஹா மாவட்டத்தில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8.6 சத வீதத்திலிருந்து 3.2 என்ற சத வீதத்தில் குறைவடைந்துள்ளது. இது ஒரு சிறந்த பெறுபோறாகும். இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிகையை 2.5 சத வீதத்துக்குள் குறைத்துக் கொள்வதும் மிக முக்கியமாகும் என்றார்.
