Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

அஸாத் சாலியை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க நீதி மன்றம் அனுமதி

 


  

(எம்.எப்.எம்.பஸீர்)


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில், அவரை தற்போதைய சூழலில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தும் சிகிச்சை பிரிவொன்றுக்கு மாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் இன்று (21) அறிவித்தது.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலிக்கப்பட்டபோதே, மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கியது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றின் நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, கடந்த தவணையின்போது அசாத் சாலி விவகார விசாரணைகளை நிறைவு செய்ய 3 வார கால அவகாசத்தை சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரியிருந்த நிலையில், இந்த விசாரணைகள் இன்னும் முடியடையவில்லை என அவர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரிதவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்களை முன்வைத்ததுடன், கடந்த 18 ஆம் திகதி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தையும் அடிப்படையாக கொண்டு, விடயங்களை தெளிவுபடுத்தினார். கடந்த 16 ஆம் திகதி அசாத்சாலி சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் தற்போது அவர் சாதாரண சிகிச்சை அறையான ( வோர்ட்) 49 ஆம் அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போதும் அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறினார்.

எனினும், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்றுடன் கூடிய சூழலில், அசாத் சாலியை உடனடியாக கட்டணம் செலுத்தும் சிகிச்சை பிரிவொன்றில் (மேச்சன் வோர்ட்) சிகிச்சைபெற அனுமதிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதிட்டார்.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு முடியுமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டதாக கூறினார்.

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸிடம் திறந்த மன்றில் கேள்வி எழுப்பிய நீதியரசர் எஸ். துரைராஜா, இன்று நாட்டில் நிலவும் சூழலில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்து மாரடைப்புக்கு உள்ளாகியுள்ள இவ்வழக்கின் கைதிக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளதா என வினவினார்.

அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அவ்வாறன வசதிகள் இல்லை என குறிப்பிட்டார்.

எனினும், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் கோரிக்கையில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும், கட்டணம் செலுத்தும் சிகிச்சை பிரிவுக்கு தடுப்புக்காவல் கைதியை மாற்றுவதாக இருந்தால் சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் அது இடம்பெறல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதியர்சர்கள் குழாம், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிச் முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் அசாத் சாலியை கட்டணம் செலுத்தும் சிகிச்சை பிரிவொன்றில் சேர்க்க அனுமதியளித்தது.

அத்துடன் இந்த விவகார வழக்கை அவசர நிலை வழக்காக கருதி மீள ஜூன் 2 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்கவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »